தியாகி எஸ். எஸ். விஸ்வநாத தாஸ் 134 வது பிறந்தநாள் இன்று
தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் அனைத்து உறவுகளுக்கும் எனது அன்பான வணக்கத்தை அன்புடன் பகிர்ந்துகொள்வது புதுக்கோட்டை
M.A.பாண்டியன். வணக்கம் உறவுகளே!
இந்திய சுதந்திரத்திற்காக 29 முறை சிறை சென்ற நமது சுதந்திரப் போராட்ட தியாகி திரு எஸ் எஸ் விஸ்வநாத தாஸ் அவர்களுடைய 135 ஆவது பிறந்த தினம் இன்றைய தினம் மிக சிறப்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. 1886ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி பிறந்த தியாகி ஐயா எஸ் எஸ் விஸ்வநாத தாஸ் அவர்களுக்கு இன்று 135 ஆவது பிறந்ததின விழா மிகச்சிறப்பாக, தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கத்தின் சார்பாகவும், முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாகவும் அனைத்து மாவட்டங்களிலும் மிக சிறப்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் மூலமாக ஐயா அவர்களுடைய திருவுருவ புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மிக சிறப்பாக கொண்டாடி கொண்டிருக்கின்றார்கள்.
தியாகி எஸ் எஸ் விஸ்வநாத தாஸ் அவர்கள் நடிகராக மட்டுமின்றி மிக சிறந்த தேச பக்தராகவும் இருந்தார். அவர் நடித்த நாடகங்கள், எல்லோரையும்போல் வெல்வெட் ஜிகினா உடைகளை அணியாமல் கதர் ஆடைகளையே தரித்தார். இவர் மேடையில் தோன்றும் போதெல்லாம் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து தேசியப் பாடல்களைப் பாடுமாறு கேட்பார்கள். போலீசார் குறுக்கிட்டு தேசியப் பாடல்களைப் பாடக் கூடாது என்று தடை விதிப்பார்கள். தடையை மீறி தேசியப் பாடல்களைப் பாடி அடிக்கடி தண்டனை பெற்று சிறை புகுவதும், விடுதலை ஆவதும், மீண்டும் பாடுவதும், சிறைக்கு போவது வழக்கமாகிவிட்டது.
அவர் மேடையில் பாடியவை தான் அடுத்து வரும் பாடல்கள் .
"ஆங்கில பேய்கள்"
ஆங்கில பேய்களெல்லாம்
திரண்டு கொண்டாடுது லண்டனிலே
ஓங்கும் சுயாட்சி படை கண்டு
திமிர் வெறி ஏறுது மண்டையிலே(ஆங்)
டயர் என்ற பேர்படைத்த ஒரு
பேய் டம்பமாய்ப் பேசுதங்கே
பயரென்ற உத்தரவை சர்ச்சில் பேய்ப்
போட்டு மிரட்டு திங்கே(ஆங்)
லாயிட்ஸ் ஜார்ஜ் எனும்
ஒரு பேய் லண்டனை ஆட்டிப்படைக்குதங்கே
பாரெட்டுத் திக்கு போற்றும்
மகாத்மாவைப் பார்த்து நடுங்குதிங்கே
வந்தே மாதரமென்னும் பேரொலி
வானைப் பிளக்குது பார்- அந்த
மந்திரத்தை கேட்டு வெள்ளைப்
பேய் மருண்டு ஓடுது பார்.(ஆங்)
---------------------------
"கதர் கப்பல் கொடி"
கதர் கப்பல் கொடி தோணுதே
கரம் சந்த் மோகனதாஸ் காந்தி
இந்திய சுதேச (கதர்)
அதற்கப்பால் ஞான ஹசம்,
அதிலே பாரதவாஸம்
இதற்குள் ஜீவப்பிரகாசம்
இனி நமக்கு சந்தோசம்( கதர்)
மானிடச் சிப்பிக்குள்ளே மகாத்மா
ஓர் முத்துப்போல
ஞானவடிவம் கொண்டு நம்மை
காக்க வந்ததாலே(கதர்)
-----------------------------
விஸ்வநாததாஸ் சவரத் தொழிலாளர் வகுப்பை சேர்ந்தவர் என்ற பாவத்திற்காக பல நடிகைகள் அவருடன் இணைந்து நடிக்க மறுத்த காலமும் உண்டு. சுப்பிரமணியர் வேடத்தோடு மயில் வாகனத்தில் அமர கூடாது என்று கூட சில ஊர்களில் உயர் ஜாதி வெறியர்கள் கலவரம் செய்தனர். ஆனால் இதனையெல்லாம் உணர்ச்சிமிக்க தேசிய தொண்டர்கள் தகர்த்து எறிந்தனர். அடுத்து வரும் பாடலும் அவர் அடிக்கடி மேடையில் பாடியது தான்.
"கொக்கு பறக்குதடி பாப்பா"
கொக்கு பறக்குதடி பாப்பா_ அதன்
குறிப்பை உணர்ந்து கொள்வாய் பாப்பா _வெள்ளை(கொக்கு )
கொக்கு என்றால் கொக்கு
இங்கே எக்காளம் போட்டு
நாளும் ஏய்த்துப் பிழைத்து வாழும்
அக்கரை சீமை விட்டு வந்து கொள்ளையடித்து கொழுக்கும்
வெள்ளைக் கொக்கு (கொக்கு )
கொத்தள மூக்கு உடைய கொக்கு_ அது
குளிர் பனிக் கடல் வாசக் கொக்கு
அந்தோ பழிகாரக் கொக்கு நம்மை
அடக்கி ஆளுதடி பாப்பா (கொக்கு )
தேம்ஸ் நதிக்கரையில் கொக்கு
அங்கு சின்ன உணவில்லாத கொக்கு- மது
மாமிசம் வெறிபிடித்த கொக்கு
நமது மக்களை ஏமாற்ற வந்த
கொக்கு -வெள்ளைக் (கொக்கு)
-------------------------------------
ஜாதியில் இழிந்தவர் என்ற காரணத்திற்காக, எந்த மயில் வாகனத்தில் அமர கூடாது என்று ஒரு காலத்தில் உயர் ஜாதியினர் தடுத்தார்களோ, அதே மயில் வாகனத்தில் சுப்பிரமணியர் வேடத்தோடு அமர்ந்து பாடும் போதே சென்னையில் ராயல் தியேட்டரில் 1940 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி மாரடைப்பினால் அந்த புனித தேச பக்தரின் ஆவி பிரிந்தது.
மறுநாள் அதே முருகன் வேடத்தோடு, அதே மயில் வாகனத்தில் அலங்கரித்து அமர்த்தி ஊர்வலமாக சென்ற போது, மறைந்த முன்னாள் நடிகர் கே பி சுந்தராம்பாள், கே எஸ் ஆனந்தநாராயணன் ஐயர் போன்ற பல நூறு நடிகர்-நடிகைகளும் காமராஜரின் அரசியல் குரு வும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தவருமான சத்தியமூர்த்தி அய்யா போன்ற தலைவர்களும், கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
ஆங்கில பேய்கள் நடத்திய வெறியாட்டம் பற்றியும் காந்தியின் சுதந்திர போராட்டம் பற்றியும் வெள்ளைக் கொக்குகள் என்று வர்ணிக்கப்பட்ட வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் பற்றியும் பாமர மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் நாடகங்களில் பாடி விடுதலை உணர்வை உசுப்பிவிட்ட விஸ்வநாததாஸ் சவரத் தொழிலாளர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அனுபவித்த கொடுமைகள் பல அன்றைய காலகட்டத்திலே. அன்று மட்டுமல்ல இன்றும் கூட நாடு சுதந்திரமடைந்து இவ்வளவு ஆண்டுகள் ஆன பிறகும் கூட நம்மைப் போன்ற மருத்துவ சமூக மக்கள் சவரத் தொழிலாளி மக்கள் பல வகைகளில் பல கிராமங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள், என்பதை இந்த நேரத்திலே நாம் நினைவுகூர்ந்து, ஐயா தியாகி விஸ்வநாததாஸ் அவர்களுடைய புகழ் புகழ் உயரவேண்டும், மருத்துவ இன மக்கள் ஒற்றுமையுடன் உணர்வுடன் சேர்ந்து வாழ வேண்டும், என்று இந்த நேரத்திலே கேட்டுக்கொண்டு ஐயா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.
நன்றியுடன்
M.A.பாண்டியன்
புதுக்கோட்டை
Comments
Post a Comment