22/5/2020. தியாகி வேதை க.வைரப்பன் அவர்களின் பிறந்த நாள்

1930 ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி தமிழ் வருஷப் பிறப்பு நாள் அன்று, திருச்சியில் டாக்டர் டி எஸ் ராஜன் அவர்கள் இல்லத்தில் இருந்து, மரியாதைக்குரிய ராஜாஜி அவர்கள் தலைமையில், சுமார் 100 தொண்டர்கள் கிளம்பி 15 நாட்கள் நடை பயணம் செய்து வேதாரணியம் சென்றடைந்து, அங்கே அகஸ்தியம்பள்ளி என்னும் இடத்தில், உப்பு எடுத்து, மகாத்மா காந்தியடிகள் தண்டியில் செய்த உப்பு சத்தியாகிரகத்தை, இங்கே, தமிழ்நாட்டில் அரங்கேற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்தப் போராட்டத்தில் மரியாதைக்குரிய ராஜாஜி அவர்கள், மரியாதைக்குரிய சந்தானம் அவர்கள், மரியாதைக்குரிய சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவர்கள், உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும், தொண்டர்களும் போலீஸ் அடக்குமுறைக்கு ஆளாகி அடிபட்டு, உதைபட்டு, சிறை சென்று, செய்த தியாகம் வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
பெரிய பெரிய அரசியல் கட்சி தலைவர்கள், பெரிய மிராசுதாரர்கள், இவர்களெல்லாம் உப்பு சத்தியாகிரகப் போர் நடத்தினார்கள் என்றால், சாதாரண பொதுமக்களும் நேரடியாக போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், தங்களுடைய சக்திக்கு உட்பட்டு ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அவர்களது அடக்குமுறைகளுக்கும், எதிர்ப்பு தெரிவித்து சில அரிய காரியங்கள் செய்திருக்கின்றார்கள்.
அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் நமது மருத்துவர் இனத்தில் பிறந்த தியாகி வைரப்பன் என்ற இளைஞன் நடத்திய சாதனை. உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்ட திரு. சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவர்களை, ஆங்கிலேய அரசு காவல்துறையினர், அடித்து துன்புறுத்தி இழுத்துச் செல்கிறார்கள். இதை பார்த்த ஊர்மக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். பிள்ளை அவர்கள் மீது வைத்த அன்பின் காரணமாகவும், பாசத்தின் காரணமாகவும், இளைஞராக இருந்த நமது வைரப்பன் அவர்களும், கண் கலங்குகிறார். அன்றே ஒரு சபதம் எடுக்கிறார். இனிமேல், ""வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்யும் எந்த ஒரு அதிகாரிக்கும், வேலைக்காரனுக்கு, முடி திருத்தம் செய்வது, சவரம் செய்வது கிடையாது"" என்று ஊர்மக்கள் முன்னிலையில் சபதம் மேற்கொள்கின்றார். வேதாரணியத்தில் தெரிந்த அரசாங்க அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் என யாருக்குமே வேலை செய்யாமல் இருந்தார்.  அன்றைய காலகட்டம், போராட்ட கால கட்டமானதால், வெளியூர்களில் இருந்து எல்லாம் அரசாங்கப் பணி செய்ய வேதாரண்யத்திற்கு வந்திருக்கிறார்கள்.
ஒருநாள் வெளியூரிலிருந்து வந்த ஒருவருக்கு முகச்சவரம் செய்து கொண்டு இருக்கும்போது, அவரை தெரிந்த ஒருவர் ""என்ன வைரப்பா! போலீஸ்காரர்களுக்கு வேலை செய்வது இல்லை என்று சத்தியம் செய்தாய், இப்போது இவருக்கு வேலை செய்கின்றாய்"" எனக் கேட்கின்றார். நமது இளைஞன் வைரப்பன் எந்தவித பதட்டமும் இல்லாமல், அவரிடம் "ஐயா, நீங்கள் போலீசா" என்று கேட்கின்றார். அவரும் ஆமாம், நான் போலீஸ் அதிகாரி என சொல்கின்றார். ஐயா, கோபித்துக் கொள்ளாதீர்கள். வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்யும் யாருக்கும், நான் வேலை செய்வது கிடையாது. நீங்கள் யார் என்று தெரியாமல் உங்களை உட்கார வைத்து வேலை செய்ய ஆரம்பித்தேன். இப்போது நீங்கள் போலீஸ்காரர் என்று தெரிந்து விட்டது. இனி வேலை செய்ய மாட்டேன், என்று பாதி சவரத்துடன் சற்று ஒதுங்கி நின்றார். 
இதைக் கேட்ட போலீஸ் அதிகாரி, துள்ளினார், குதித்தார். இளைஞன் வீரப்பனை மிரட்டினார். உன்னை ஜெயிலில் அடைத்து விடுவேன், என்று பயமுறுத்தினார். எந்த சலசலப்புக்கு அஞ்சாத சிங்கம் ஆக இளைஞன் வீரப்பன் எதிர்த்து நின்றான். முடியாது, என்றால் முடியாது. உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள், என்றார்.
அசிங்கப்பட்ட போலீஸ் அதிகாரி பாதி சவரத்துடன், இளைஞன் வீரப்பனையும், பெட்டியையும்,  எடுத்துக் கொண்டு நீதிபதி முன் நிற்க வைக்கின்றார்.
நீதிபதி முன் விபரத்தை கூறுகின்றார். நீதிபதி, இளைஞனை பார்த்து, "செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, பாதி சவரம் செய்து விடு", என கூறுகின்றார். இல்லையென்றால், தண்டிக்கப்படுவாய், சிறைக்கு அனுப்பி விடுவேன், என மிரட்டுகிறார்.  இதைக் கேட்ட இளைஞன் வைரப்பன், போராட்டத்தில் கலந்துகொண்டு நாம் சிறைக்கு செல்ல முடியாது, வெள்ளைக்காரனுக்கு கூலி வேலை செய்யும் இவருக்கு "பாதி சவரம் செய்வதை விட, சிறைக்கு போவதே மேல்," என நினைத்து, ஐயா, எஜமானே, போலீஸ்காரருக்கு மிச்சத்தை நம்மால் செய்ய முடியாது,. அப்படி செய்ததுதான் ஆகனுமுனா, இந்த இருக்கு கத்தி நீங்களே எடுத்து செய்துவிடுங்கள், என்று கூறுகிறார்,  வீரமிக்க மருத்துவ இன தொண்டன் வைரப்பன் அவர்கள்.
நீதிமன்றத்தில் கூடியிருந்தலர்கள் இதை கேட்ட உடன் சிரித்து விட்டார்கள். நீதிபதிக்கு வந்தது கோபம். உடனே, வைரப்பனுக்கு  ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறுகின்றார். இளைஞன் வைரப்பனுக்கு ஏக மகிழ்ச்சி. காந்திஜி, நேருஜி, சுபாஷ் சந்திரபோஸ், தமிழகத்தில் ராஜாஜி, காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், வ.உ.சி, இன்னும் என்னோற்றோர், சுதந்திரத்திற்காக களத்தில் இறங்கி போராடியதால் சிறைக்குச் சென்றார்கள்.
நம்மால் முடியவில்லையே என நினைத்தோம். வெள்ளைக்காரனை எதிர்த்து சிறைக்கு செல்லவில்லை என்றாலும், அவனுக்கு சேவகம் செய்யும் அதிகாரிகளை எதிர்த்து சிறை செல்வோம், என சிறைக்கு செல்கிறார். 
அப்படிப்பட்ட வீர தீயாகிக்கு தான் 1988ஆம் ஆண்டு மாநில அரசும், மத்திய அரசும் பாராட்டு தெரிவித்து கௌரவித்தது.
28/4/1988 அன்று இந்திய திரு நாட்டின் ஜனாதிபதி திருமிகு ஆர்.வெங்கட்ராமன் அவர்களால், ""உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட வீரத் தியாகி வைரப்பன்", என்று புகழ் மாலை சூட்டப்பட்டார்.
சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட, நமது மதுரை திருமங்கலம் தியாகி S.S.விஸ்வநாததாஸ் அவர்கள் வரிசையில், வேதாரண்யம் தியாகி திரு.க.வைரப்பன் அவர்களும் நமது மருத்துவர் இனத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலே இருக்கின்றார்கள், என்பதை நினைத்து, நாம் பெருமை பெற்றுக்கொண்டு இருப்பதோடு அல்லாமல், அவர்களின் பிறந்த நாளையும், நினைவு நாளையும், நினைவு கூர்ந்து அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.
  அந்த வகையில் ஐயா தியாகி க.வைரப்பன் அவர்கள் 1997 ஆகஸ்ட் 15 அன்று நம்மை விட்டு பிரிந்தாலும், அன்றைய தினம் சுதந்திர தினம் என்பதால், எல்லா தியாகிகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவோம்.
ஆனால்,தியாகி திரு.க.வைரப்பன் அவர்களின் பிறந்த நாள், வருகின்ற மே மாதம் 22 ஆம் தேதி அன்று வருவதால், அன்றைய தினம் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாட வேண்டும், என அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

 நன்றியுடன் 

புதுக்கோட்டை M.A.பாண்டியன் 

மாநில ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்துவோர் தொழிலாளர் நல சங்கம்

Comments

Popular posts from this blog

அம் -பட்டர் விளக்கம்

""சென்னியவிடுதியிலிருந்து- சென்னை மாநகர் வரை"" சென்னியவிடுதி C.வைத்தியநாதன்

வேதை க வைரப்பன்