""சென்னியவிடுதியிலிருந்து- சென்னை மாநகர் வரை"" சென்னியவிடுதி C.வைத்தியநாதன்
வணக்கம். உறவுகளே!
இனமான காவலர், சென்னியவிடுதி தந்த மாணிக்கம், அண்ணன் திரு.திரு.C.வைத்தியநாதன் அவர்கள், ஆசிரியராக இருந்து பணி செய்த சமுதாயமடல் பத்திரிக்கையில் 2000ஆம் ஆண்டு நவம்பர் மாத இதழில்
""சென்னியவிடுதியிலிருந்து- சென்னை மாநகர் வரை!""
என்ற தலைப்பில் எழுதிய மடலை எழுத்து பதிவாக தருவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்.
புதுக்கோட்டை
M.A.பாண்டியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம்
______________________________________
""சென்னியவிடுதியிலிருந்து- சென்னை மாநகர் வரை!""
__________________C.வைத்தியநாதன்_____________
என் உயிரினும் மேலான, மகத்தான, மருத்துவர் இன தொழிலாளர்களே, அரசு அலுவலர்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே, இனமான இளம் சிங்கங்களே, பெற்றெடுத்த எம் தாய்மார்களே, அனைவருக்கும் என் வணக்கத்தை உங்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.
ஆசிரியருக்கு வயது 50 என்று ஒரு சிறு செய்தி அக்டோபர் மாத இதழில் வெளியிடப்பட்டது. அதை எத்தனை பேர்கள் கவனித்தார்களோ தெரியாது. அதை கவனித்த ஒரு சிலர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்களுக்கு என் நன்றியை இந்த நேரம் தெரிவித்துக் கொள்கின்றேன்.
20/10/1950 ல், அ.சிதம்பரம் -மீனாட்சி இவர்களின் மகனாய் பின்தங்கிய குக்கிராமத்தில் பிறந்த நான் ஏதோ வளர்ந்து ஓரளவு படித்து,
1970 முதல் பொதுப்பணி சமூக சேவையில் ஈடுபட்டு வந்தேன். விவசாயத்தில் அதிக அக்கறை கொண்ட நான்
உழவர் விவாத குழு என்ற அமைப்பு மூலம் அரசு வேளாண்மை துறை அலுவலர்கள் தொடர்பு கொண்டு செயல் பட்டேன்.வானொலி பெட்டியில் செய்திகளை கேட்டுவந்த நான், வானொலி நிலையம் பற்றிய எள்ளளவும் அறிந்திராத நான் திருச்சி வானொலி நிலையத்தில் இருந்து பேசுவதை எல்லோரும் கேட்டு வியப்படைந்து என்னிடம் நேரில் வந்து பாராட்டினார்கள். இப்படி அடிக்கடி வானொலியில் பேசி வந்த நான் பலரும் அறிந்தவனாக வளர்ந்து வந்தேன்.
பிறகு பட்டு வளர்ச்சி துறை மூலம் பட்டுப்புழு வளர்ப்பில் எங்கள் பகுதியில் முதல்வனாக ஈடுபட்டு அதில் பெரும் வளர்ச்சி ஏற்படுத்தி ஒரு கூட்டுறவு சங்கம் உருவாக காரணமான நானே, அச்சங்கத்தின் தலைவராக்கப்பட்டேன். இந்தியாவிலேயே எங்கள் ஊரில் தான் முதன்முதலில் பட்டுப்புழு குளிர்பதன அறையில் வளர்க்கும் கட்டிடம் என் முயற்சியால் எங்கள் ஊரில் கட்டப்பட்டது. மாநில அளவிலான அதிகாரிகள் நன்மதிப்பையும் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் இவர்கள் பாராட்டையும் பெற்றேன். பட்டுவளர்ப்பு விளக்கவுரையாளராகவும் சிறிது காலம் பணி செய்தேன்.
பிறகு தமிழ்நாடு முழுவதும் தெரியும் அளவில் கூட்டுறவு சங்கத்தை நடத்தி மிக நன்றாக செயல்படும் முதல்10 சங்கத்தில் நானிருக்கும் சங்கமும்ஒன்று என்று பாராட்டு பெற்றது. எங்கள் ஊருக்கு போக்குவரத்து வசதி என்பதே இல்லை. சாலை வசதியும் இல்லை. இதை பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு போனேன்பயனில்லை. உடனே நான் ஒரு அரசியல் கட்சியில் தீவிர உறுப்பினர் ஆகி என் தலைமையில் தொடர்ந்து மூன்று நாட்கள் 300 நபர்களை திரட்டி எங்கள் ஊராட்சி ஒன்றியம் திருவோணம் என்ற ஊரில் உண்ணாவிரதம் இருந்தேன். அந்த நேரம் இருந்த ஆணையர் நம்மவர் என்பதே எனக்குத் தெரியாது. அவர் என்னை பற்றி விசாரித்து மருத்துவர் என்று தெரிந்து கொண்டு உண்ணாவிரதத்தை நிறுத்துமாறும், விரைவில் சாலை வசதி ஏற்பாடு செய்வதாகவும், அவரும் நம்மவர் தான் என்பதையும் அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த நம்மவர் ஊர் நல அலுவலர் ஒருவரிடம் தகவல் தந்தார். அதன்பின் அன்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டோம். சில தினங்களில் எங்க ஊர் வந்து சாலை வசதிக்கு வழி செய்தார். முதன்முதலில் என் முயற்சியால் தான், பட்டு நூல் நிலையத்தை திறந்து வைக்கும் காரணத்தை காட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஒருவரை எங்க ஊர் மண்ணில் வரவழைத்தேன். இதுபோன்று ஊரில் பலரும் பயன்படும் பணிகள் செய்து வந்தேன். திடீரென்று வந்தது ஜாதி பிரச்சனை. அப்போது தான் நான் சிந்தித்தேன். ""நம் இன மக்களுக்கே நாம் சமூகப் பணியை செய்யலாமே"" என்று ஆர்வம் கொண்டேன். கூட்டுறவு சங்கத் தலைவர் பதவியை இராஜினாமா செய்து விட்டு, நம் சங்கம் பற்றி நம் மக்களுக்கு பணி செய்யும் விதம் பற்றி விசாரித்தேன். டீம் சங்கம் தான் முதன் முதலில் எனக்கு தெரியும். கரம்பக்குடி டாக்டர் த. நித்தியானந்தம் அவர்கள் எனக்கு வழிகாட்டியாக இருந்து, அப்போது புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் கோ.தேவதாசன் அவர்கள் முன் என்னை டீம் சங்கத்தில் அறிமுகப்படுத்தினார்.
அதன் பின் அதில் இருந்து கீழ்மட்டத்தில் இறங்கி பணி செய்ய முடியாது என்பதை அறிந்த நான், மருத்துவர் சங்கத்தை பற்றி அறிய புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அமரர் உ. கருப்பையா அவர்களை அணுகினேன். அவர் எனக்கு ஊக்கமளித்து ""எதிர்காலத்தில் நம்மவர்களுக்கு நீங்கள் பயன்படுவீர்கள் ""என்று வாழ்த்தினார்.
நான் எனது தாய் சங்கமான திருவோணம் ஒன்றிய சங்கத்தில் ஒரு சாதாரண உறுப்பினர் ஆகி என் அனுபவத்தின் வாயிலாக ஒரு சிறந்த சங்கம் ஆக்கினேன். அந்த நேரம் திண்டுக்கல் நகரில் மாநில சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறும் செய்தியை புதுக்கோட்டை உ.கருப்பையா அவர்கள் மூலம் அறிந்து எங்கள் சங்கத்தில் இருந்து பத்து நபர்கள் சேர்ந்து எப்படி மாநில சங்கம் செயல்படுகிறது என்று வேடிக்கை பார்க்க சென்றோம். அங்கு சென்று பார்த்தால் ஒரே ஆச்சர்யம். மஞ்சள் துண்டு, கல்வம், குழவி சின்னம் கொண்ட கொடி, மதுரையில் இருந்து வாகனங்களில் அதிகமானவர்கள் வந்தவர் வந்திருந்தார்கள். முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் மீண்டும் நிர்வாகிகள் என அறிவிப்பு வெளியானது. அதை மதுரை திருப்பரங்குன்றம் N.S.போஸ் அவர்கள் எதிர்த்த உடன், பிறகு தேர்தல் நடத்துவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டு யாருக்குமே தெரியாத என்னை பொதுச்செயலாளர் ஆக்கி 1917 முதல் வரலாறு படைத்த நம் சங்கத்தின் சொத்தாக முதல் நாள் வாங்கிய ஒரு மினிட் புக் புத்தகத்தை 1-9-1987 அன்று அதிகாலை என் கையில் கொடுத்து, "இதுதான் சங்க சொத்து "என்றார்கள். அதை பெற்றுக்கொண்டு அனைவரின் ஒத்துழைப்பால் நான் சுமார் பல லட்சம் நம் மக்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். மாநில நிர்வாகிகள் அனைவரும் தன் சொந்த செலவிலேயே நம் மக்களை சந்தித்து சேவை செய்கின்றார்கள். எல்லோருமே ஏழ்மையை துணையாக கொண்டு தான் பணி செய்து வருகிறோம்.
கிராமப்புறங்களில் நம்மவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை மனதில் கொண்டு தான் என் பணியை கொஞ்சம் தீவிரப்படுதினேன். பல பெயர் கொண்ட சங்கங்களை எல்லாம் தேடிப் பிடித்தேன். நாட்டில் நலிவுற்று ஓரம் கட்டப்பட்ட நம் மக்கள் நலம் கருதி ஒரே அமைப்பு தேவை என எண்ணினேன். பல பெயர் கொண்ட சங்கம், குறிப்பாக டீம், மார்வலஸ், மெட்ராஸ் டீம் கிளப் இவைகள் பொருளாதாரம் கொண்டவை என்பதால், நீங்கள் இயன்றதை நம் மக்களுக்கு செய்யுங்கள் என்றே கேட்டுக் கொண்டேன். அவர்களும் செய்துவருகிறார்கள். பத்திரிகை மூலமும் பணி செய்ய விரும்பி 11 ஆண்டு காலமாக மிகவும் சிரமத்தில் பொருள் இழப்பில் பேப்பர் நடத்தி வருகின்றேன். ஆதரவு குறைவு. ஆதரவு தராதவர்கள் மிக அதிகம். நான் ஒரு மிகவும் சாதாரணமானவன். ஆனால் சக்திக்கு மீறிய பொருள் இழப்பில் இன்று இருக்கின்றேன். நம் சாதி பத்திரிக்கையை நம்மவர்களே அலட்சியம் செய்வது எனக்கு வேதனை தான். வேம்பு உடல் நலத்திற்கு நல்லது. அதை யாரும் விரும்பி சாப்பிடுவது இல்லை. அதுபோல் நம்மவர்களுக்கு ""சமுதாய மடல்"" வேம்பாக உள்ளது. ஒவ்வொரு இதழும் ஒரு தலைப்பிரசவம் போல் வெளிவருகிறது. இந்த பொறுப்பிற்கு வந்தவுடன் 1988 இல் மதுரையில் மாபெரும் பேரணி மாநாடு.., அடுத்தடுத்து கூட்டங்கள், மனுக்கள், அளிக்கப்பட்டது. 1990 திருச்சியில் பிரம்மாண்டமான பேரணி மாநாடு, 1995 இல் பேரணி சென்னையில் மனு கொடுக்கப்பட்டது. பல ஊர்களில், நகரங்களில் ஊர்வலம், தாசில்தார், மாவட்ட ஆட்சியரிடம் மனு. ஆனால் குறிப்பிடும்படியாக பயன் ஏதுமில்லை. கூட்டங்கள், ஊர்வலங்கள் மாநாடு இவைகளினால் நம் மக்கள் சக்தியும், பொருளும் விரயமாகிறது தவிர பலன் ஏதுமில்லை. நமது கூட்டங்களில் மாநாடுகளில் பெரும்பாலும் திமுக அரசியல் தலைவர்கள் தான் அதிகம் கலந்து கொண்டு, நான் வளர்ந்த இடம் முடி திருத்தகம் ,திமுகவை நீங்கள்தான் வளர்த்தீர்கள், என்றுஒரு அழிக்க முடியாத முத்திரையை பல ஆண்டுகளாக நம்மீது பதிக்கப்பட்டு இருக்கிறோம். இதை யாரும் மறுக்க முடியாது. அரசு மாறிய போதும் நாம் எந்த சலுகையையும் பெறவில்லை. எந்த அரசு வந்தாலும் ""அரசியல் சார்பற்ற சங்கம், ஆளுகின்ற கட்சிக்கு ஆதரவு ""என்ற தீர்மானம். இது எனக்கு மிகவும் வேதனையாகவும் இருக்கும். கலைஞர் அவர்கள் இந்த இனத்தின் மீது பற்று கொண்டவர் என்பது எல்லோரும் கூறும் சொல். கலைஞருக்கு பின் யாரும் நமக்கு எதுவும் செய்ய வாய்ப்பில்லை என்று கூறுவதை பார்க்கிறோம். யாருமே ஏறெடுத்து பார்க்காத தியாகி இல்லம் அரசு நினைவகம் ஆக்கினார் கலைஞர். உலகில் எங்கும் இல்லாத வகையில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு வாரியம். இனியும் 10/10/2000 மாநாடு மூலம் பயன்பெறும் வாய்ப்பு உள்ளது. கேரளா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு, ராஜஸ்தான், ஆந்திரா, பம்பாய் ஆகிய இடங்களில் நமது உறவினர்களோடு தொடர்பு கொண்டும், மலேசிய சங்கமும் தொடர்பு கொண்டிருப்பது நீங்கள் எனக்குத் தந்த வாய்ப்புதான். எந்தவித தொலை தொடர்பும் இன்றி, சரியான போக்குவரத்து வசதியும் இன்றி, பொருளாதார வசதியும் இன்றி, இன மக்களின் சேவை ஒன்றை மட்டுமே எண்ணி செயல்படும் எனக்கு, ""நீங்கள் தான் எல்லாமே"" . தற்சமயம் முடிதிருத்தும் தொழிற்சங்கம் சென்னை எம்.நடேசன் அவர்கள் தலைமையிலும், மருத்துவர் சமூக நலச்சங்கம் குளித்தலை டாக்டர் A.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையிலும் செயல்படுகிறது. "ஒரே தொழிற்சங்கம்" "ஒரே ஜாதி சங்கம்" நமக்கு மிகவும் அவசியம். அதுதான் நமக்கு நன்மை தரும். இதை எல்லோரும் உணர்ந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். பல அரசியல் கட்சியை சார்ந்த சிலர் நம்மில் இருக்கிறோம். அதிகமானவர்கள் திமுகவில் தான் இருக்கிறார்கள். அதே நிலையில் நாம் தொடரலாம். ஆட்சி மாறினால் நமக்கு நன்மை கிடைக்காது என்று சிலர் எண்ணலாம். இப்போது என்ன அமைச்சராகவா இருக்கிறோம். ஆட்சி மாறியதும் பதிவி போய்விட. கவலைப்பட வேண்டாம். நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும். விரைவில் நாம் நம் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவோம். சென்னையில் சீட்டு கேட்டோம், தேர்தல் நேரம். நம் நிலை பற்றி ஒரு தெளிவான முடிவு ஏற்படும். எப்படியோ இந்த மக்கள் நலன் கருதி கிட்டத்தட்ட ஒரு முழுநேர ஊழியனாக விட்ட எனக்கு, மாநில தலைவர்களாக சேலம் டாக்டர் ஐயா மு.சி. பிரகாசம் அவர்கள், திருபுவனம் அமரர் மு.ராசு அவர்கள், லால்குடி பெ.ரங்கசாமி அவர்கள், ஆகியோர்கள் மிகுந்த ஆதரவு அளித்தார்கள். தற்சமயம் M.நடேசன் அவர்களும், குளித்தலை டாக்டர் பாலசுப்பிரமணியன் அவர்களும் ஆதரவு அளித்து வருகிறார்கள். பெயர் குறிப்பிட இயலாமைக்கு வருந்துகிறேன். மாநில, மாவட்ட நிர்வாகிகள், வட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள்அனைவரும் எனக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளித்து வருகிறார்கள். அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னிய விடுதியிலிருந்து சென்னை வரை சென்று நம் மக்களுக்காக குரல் கொடுக்கும் வாய்ப்பை உங்கள் மூலம் நான் பெற்றமை கண்டு பெருமகிழ்வு கொள்கின்றேன். நம் இனம் மகத்தானது. சாதியை மறக்கக்கூடாது. இந்த இனத்தில் நம்மை ஈன்ற தாய் தந்தையை வணங்க வேண்டும் என்பதற்காகத்தான், முதலில் என் பேச்சில் ""மகத்தான இந்த மருத்துவ இனத்தில் என்னை ஈன்றெடுத்த தாய் தந்தையரை வணங்குகிறேன்"", என்று ஆரம்பிக்கின்றேன். சாதி இழிவு இல்லை. நம் செயலில் தான் இழிவு இருக்கு. மருத்துவர் இனத்தில் பிறந்து உயர்பதவியில் இருப்பவர்கள் சாதியை சொன்னால், இழிவு என்று எண்ணி, சாதியை மறைத்து வாழ்கிறார்கள். அது சில சமயங்களில் அவர்களுக்கு அவசியமாகிறது.
ஆனால் வருங்கால சமுதாயத்தை வளப்படுத்த வேண்டிய இளம் சிங்கங்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதை எண்ணி மிகவும் வேதனை அடைகின்றேன். 20 /10 /2000 அன்று எனக்கு வயது 50 தொடங்குகிறது. இந்த இனத்தில் பிறந்த நம் இளம் சிங்கங்கள் எனது ஐம்பதாவது வயதில் துவக்கத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் ஒரு சபதம் ஏற்க வேண்டுகிறேன். நான் இனிமேல் குடிப்பதில்லை, என்று சபதம் ஏற்று அதையே எனக்கு பரிசாக அளிக்க வேண்டுகின்றேன். உயர்பதவியில் இருக்கும் நம்மவர்கள் தங்களால் ஒரு சிலருக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும், அதற்கு வழிகாட்ட முடியும், என்றால் அப்படி செய்வதின் மூலம் என்னை வாழ்த்திட வேண்டுகின்றேன். நம் இன செல்வந்தர்களாக இருப்பவர்கள் கல்வி பெற வசதி இல்லாத பிள்ளைகளுக்கு உதவி, கொடிய வியாதிகள் அவதியுறும் ஏழை நம்மவர்களுக்கு மருத்துவ உதவி, இவைகளை செய்வது என்று உறுதி செய்வது மூலம் என்னை வாழ்த்தலாம். எப்படியோ இந்த இனத்தில் பிறந்த ஒவ்வொருவரும், நம் இன முன்னேற்றம் பற்றி ஒவ்வொரு நாளும் ஒரு பதினைந்து நிமிடமாவது நினைக்க வேண்டும். அப்படி நினைக்கும் போது நம் சாதி நிச்சயம் மறையாது. மனதளவிலாவது வாழும். நீங்கள் நம் இனத்திற்கு சேவை செய்யலாமே! நம்மவர்கள் தற்சமயம் நல்ல விழிப்புணர்வு கொண்டுள்ளார்கள். பலர் பயன் பெற சிலர் தான் உழைக்க முடியும். இதுதான் உலக நியதி. பல கோடி மக்கள் சுதந்திரம் பெற சிலர் தானே தியாகம் செய்தார்கள். உங்களின் ஆதரவு இன்னும் அதிகம் தேவை. சமுதாயம் மடல்ஆரம்பித்த இடத்திலேயே தான் உள்ளது. நட்டம் பெரும் நட்டம். இதுதான் நடக்குது. வறுமை தான்துணையாக வந்து கொண்டே இருக்கிறது.
எளிமைதான் என்னை வழி நடத்தி செல்கிறது. எப்படியும் விடியும் என்ற தன்னம்பிக்கை தான் தினம்தினம் என்னை தட்டி எழுப்புகிறது. சென்னையில் நடந்த 10/10/2000 நம் மாநாடு விடிவெள்ளியாக தெரிகிறது. பார்ப்போம்! பயன் வருமா? பார்ப்போம்.
அன்புடன், இனத்தொண்டன்ஆசிரியர்.
குறிப்பு.
ஆசிரியர், இனமான காவலர், சென்னியவிடுதி தந்த மாணிக்கம்,
25/12/2001ஆம் ஆண்டு நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.
வாழ்க வைத்தியநாதன் புகழ்!
வளர்க மருத்துவர் ஒற்றுமை!!
வாழ்க மருத்துவர் சமுதாயம்
ReplyDelete