# எங்க சியாங்கையில காசுதுட்டு கொஞ்சம் கனமாருந்தா முடிவெட்ட என்னிய சைக்கிள்ல ஒக்காரவச்சுக்கிட்டு நாலழுத்துல பன்னியான்லருந்துசெக்காணத்துக்குக் கூட்டிக்குப் போயிரும்

மண்வாசனை- 7, "அம்மாசி" 

# எங்க சியாங்கையில காசுதுட்டு கொஞ்சம் கனமாருந்தா முடிவெட்ட என்னிய 
சைக்கிள்ல ஒக்காரவச்சுக்கிட்டு 
நாலழுத்துல பன்னியான்லருந்து
செக்காணத்துக்குக்  கூட்டிக்குப் போயிரும் 
அப்பறென்ன நந்தவனத்துல ஒரு குளியலப்போடுறதுதே தாம்சம் 
மண்டயன் விருமாண்டி கடையில 
அதுக்கு கள்ளு எனக்கு மசாலா மொச்ச
மண்டையில முடி பழையபடிக்கா 
தளையிறவரைக்கும் உள்ளூருல முடிவெட்ற  அம்மாசியோட வில்லத்தனத்துக்கிட்ட நம்பியாரு தோத்துப்போகணும் 
என்ன, எல்லாருக்கும் 
குருவிக்கூடுசவச்சு நல்லா எம்ஜீயார்மாரி 
வெட்டிவிடுவாப்புல 
ரெண்டு வெட்டுக்கு ஒருவிச 
வெளியூரு போற கைதானண்டு 
நெனப்பாப்பிலயோ என்னமோ
எனக்கு மட்டும்
ஒட்ட அடுச்ச விட்ருவாப்புல

# ஒரு மண்டய முடிக்கிறதுக்குள்ள 
மூணு பீடிய இழுத்தெறிஞ்சிருவாப்புல 
நல்ல ஒசரம் அம்மாசி
தலப்பலகையில ஒக்காரவச்சு 
மும்பாதம் தரையூண்டி குத்தவச்சுக்கிட்டா 
கத்திரிப்பான் ஒருகையில 
ஒக்காந்திருக்கிறவன் தல ஒருகையில 
எவ்வளவு பெரிய வெளக்கெண்ணெயா இருந்தாலும் தலையசைச்சிரப்பிடாது 
அடிக்க மாட்டாப்ள மத்தபடி 
உசுரோட வீட்டுக்குப் போகலாம் 

# சின்னப்பயக தலையெல்லாம் அம்மாசியோட கையிக்குக் காணாது 
முடிவெட்டித் திரும்புறதுக்குள்ள 
காச்சலே வந்துருக்கு எனக்கெல்லாம்
ஒடஞ்ச பழங்காலத்து காரவீடுதே  
அம்புட்டுச் சுத்தமா இருக்கும் 
அம்மாசி சம்சாரம் ரஞ்சிதந்தே 
ஊருக்குள்ள இருக்குற முக்காவாசிப் பேருக்கு பேறுகாலம் பாத்தது

# ஒரு நேரம் பொடுகுவத்திப் போயி 
ஊருக்குள்ள ஏகப்பட்ட சின்னதுக 
அம்புட்டுக்கும் அம்மாசிதான் 
முடிவெட்டுவாப்பல 
நொட்டாங்கை பெருவெரலவச்சு 
மூக்க நிமுத்துக்கிட்டு 
முடிய வெட்டுறப்பயிலயும் 
கம்புக்கூட வழிக்கையிலயும் 
கண்றாவியா இருக்கும் 
பித்துக்கால்காரனும் இவருகிட்டதே வந்து 
வைத்தியம் பாப்பான்
 
# குடும்பங்கள்ல பிள்ளப்பெத்தாலும் சரி 
ஆள்செத்தாலும் சரி 
இவுக இல்லயிண்டா ஊரு 
வீசிப்போயிரும் 
பொணத்துக்கு மொகச்சவரஞ் செஞ்சு குளுப்பாட்டி கால்கட்டு 
நாடிக்கட்டெல்லாம் போட்டு 
செவக்கிவச்சு
புதுப்பொண்ணு புதுமாப்பளமாரி சோடுச்சு 
சாத்திவச்சிட்டுப் போவாப்புல 

# அப்பறம் பட்டமெடுக்கவச்சு
கடசியாக் குளுப்பாட்டி  
கொடமொடச்சு 
செத்த மனுசரோட மகெங்களுக்கு மொட்டையடுச்சு 
போடு பணம் முடுச்சுக்குடுத்தா 
மத்த தொழ்லாளிங்களுக்கு 
கூலிகுடுத்தது போக 
அம்மாசிக்கு கெடைக்கிற பங்குத் துட்ட 
காதுக்குள்ள வச்சுக்கிட்டு 
நடப்பாப்ல பாரு ஒரு நட 
ராச நட 

# ஏகாதசி

Comments

Popular posts from this blog

அம் -பட்டர் விளக்கம்

""சென்னியவிடுதியிலிருந்து- சென்னை மாநகர் வரை"" சென்னியவிடுதி C.வைத்தியநாதன்

வேதை க வைரப்பன்