சுளுந்தீ’. ‘பண்டிதர்’ நிலையிலிருந்து ‘முண்டிதர்’ நிலைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிய இந்த அரிய ‘ஆவண நாவல்’

சுளுந்தீ’. ‘பண்டிதர்’ நிலையிலிருந்து ‘முண்டிதர்’ நிலைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிய இந்த அரிய ‘ஆவண நாவல்’ தமிழுக்குக் கொடை. தமிழில் அம்+பட்டர் என்பதே ‘அம்பட்டர்’ ஆனது என ஒரு விளக்கம் உண்டு. உயர் சாதியினருக்கு மருத்துவம் பார்க்கையில் தீட்டினைத் தவிர்க்கும் பொருட்டு ‘அழகிய பட்டுத் துணியினை அவர்கள் கைமேல் அணிவித்து நாடி பார்த்ததால் இப்பெயர் வந்தது என்பர். ‘அம் பட்டு’ என்றால் அழகிய பட்டு. ஆனால் இவ்விளக்கம் பொருத்தமானதாகத் தோன்றவில்லை. இரணசிகிச்சை மற்றும் பிரசவத்தை எப்படி அணுகியிருப்பார்கள் என்கிற கேள்வி பிறக்கிறது.

இன்று இழிசொல்லாக மாறியுள்ள ’அம்பட்டர்’ என்ற சொல்லின் உண்மைப் பொருளே வேறு. அது ‘அம்பா’ (பக்கம்), ஸ்தா (இருப்பவர்) ஆகிய இரு வடமொழி வேர்ச்சொற்கள் இணைந்து தன்னிடம் சவரம் செய்து கொள்பவர் அருகிலோ, மருத்துவர் பார்த்துக் கொள்பவர் அருகிலோ இருப்பவர் என்ற பொருளைத் தருவதாகும். மலையாள சவரத் தொழிலாளியான ‘காவுதியன்’ அருகிலிருப்பவர் எனும் பொருளில் ‘அடுத்தோன்’ என்று அழைக்கப்படுவது சான்று.

வேதியர் தொழிலை உயர்வான தொழிலாக நிலைநிறுத்த இதரத் தொழில்களைக் கீழ்மைப்படுத்த வேண்டிய அவசியம் சனாதனத்துக்கு நேரிட்டது. எனவே அதற்குப் பிறப்பு சார்ந்த கருத்தியலை உருவாக்கினர். அம்பட்டர் குலமும் அதற்கு விதிவிலக்கல்ல. மனு கூறுகிறார்: ‘ப்ராஹ்மணாத் வைஷ்ய கந்யாயி மம்பஷ்டோ நாமஜயதே’ (10.8) – பிராஹ்மண்னுக்கு வைசிய மனைவியிடத்துப் பிறந்தவரே ‘அம்பஷ்டன்’.

இதுபோல் ‘நாவிதர்’ என்கிற சொல்லுக்கு, ‘பண்டிதம், முண்டிதம், சங்கீதம், புரோகிதம்’ முதலிய நால்வகைத் தொழிலையும் செய்தவராகையால் ‘நானாவிதர்’ என்றழைக்கப்பட்டு ‘நாவிதர்’ ஆனதாகக் கூறுவர். இக்குலத்தினர் மேற்கண்ட தொழில்களைச் செய்தது உண்மையே. ஆனால் நாவிதர் என்கிற சொல்லும் சமஸ்கிருத மூலமாகக் கருதப்படுகிறது. ‘நாசியிலிருந்து பிறந்தவர்’ எனும் பொருளில் ‘நாசுவன்’ என்று பிரிட்டிசார் காலக் கணக்கெடுப்புப் பதிவில் பதியப்பட்டுள்ளதை எட்கர் தர்ஸ்டன் சுட்டுவார். தெலுங்கில் ‘நாசியன்’ என்றும், மலையாளத்தில் சிலவிடங்களில் ‘நாவிதன்’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

புரோகிதர் தொழிலில் இவர்கள் ஈடுபட்டதற்குச் சான்றுகள் ஏராளம். புகழ்பெற்ற பூரி ஜகன்னாதர் கோயிலின் பூசாரியும் அதிகாரபூர்வ புரோகிதரும் இக்குலத்தினரே. இவர்கள் சமைக்கும் உணவு ஒருசில ஸ்மார்த்தர்களைத் தவிர மற்ற பார்ப்பன இனத்தவர்களால் உண்ணப்படும். தமிழகத்திலும் சேலம் மாவட்ட கொங்கு வேளாளர் திருமணச் சடங்குகளைச் செய்பவராக இக்குலத்தினர் இருந்துள்ளனர். கூடியிருப்பவர்களுக்குத் தாலிக் கட்டப்போவதாக அறிவித்துப் பின்னர்த் தாலியைக் கட்டுபவராகவும் இவர்களே இருந்துள்ளனர். சேர, சோழ, பாண்டியர் ஆட்சியில் ஒரு பார்ப்பனரும் ஓர் அம்பட்டரும் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும், திருமணத்துக்கு வந்த பார்ப்பனர் இறந்ததால் கூடியிருந்தவர் அதைக் கெட்ட சகுனமாகக் கருதி அம்பட்டரையே குருவாக ஏற்றதாகவும் இந்த வழக்கத்துக்குக் காரணம் என்று ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ நூல் விளக்கும்.

திருமணச் சடங்கில் ‘நாசுவன்’ என்றழைப்பது அபசகுனமாகக் கருதப்பட்டதால் அவர்களை ‘குடிமகன்’ என்று மரியாதையாக அழைத்தனர். இதே மரியாதை திருவாங்கூர் பகுதியிலும் கிடைத்துள்ளது. ‘ப்ரோபகார்’ என்று விரிவாகவும், ‘பிராணு’ எனச் சுருக்கமாகவும் அவர்கள் அழைக்கப்பட்டனர். வட திருவாங்கூரில் சிலர் ‘பணிக்கர்’ பட்டமும் ஏற்றுள்ளனர். ‘வைத்தியன்’ பட்டமும் இருந்துள்ளது. இக்குலத்துப் பெண்கள் தென் திருவாங்கூரில் நாயர் சாதி பெண்கள் அணியும் அணிமணிகளைப் பின்பற்றினர். தமிழகத்திலும் இவர்கள் வலங்கைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

மருத்துவத் தொழில் காரணமாக ’பண்டிதர்’ என்றும், ‘பரியாரி’ என்றும் இவர்கள் அழைக்கப்பட்டனர். அம்பஷ்டர்கள் மருத்துவர்களாக விளங்கியதை மனுசாஸ்திரம் குறிப்பிடுகிறது. ’அம்பஷ்டாநாம் சிகித்ஸநம்’ (10.36) ’அம்பஷ்டர்களுடைய ஜீவனத் தொழில் வைத்தியம் செய்தல்’. மகாபாரத்தின் தொன்மவியலில் இரட்டை அஸ்வின்களான கடவுளின் மருத்துவர்கள் சூத்திரராகக் கருதப்பட்டனர் என்கிறார் ஆர்.எஸ்.சர்மா.

உடல் காயங்களுக்கு மருத்துவம் செய்கையில் சிலவிடங்களில் மயிர்நீக்க வேண்டியிருந்ததால் சவரத் தொழிலும் இவர்கள் வசப்பட, பின்னர் அதுவே இழிநிலைக்குத் தள்ளியது என்கின்றன ஆய்வுகள். பழங்காலத்திலேயே நாவிதர் தொழில் இழிநிலைக்கு ஆளானதைப் புத்த ஜாதகக் கதைகள் தெரிவிக்கின்றன. புத்த துறவியான உபாலி பிறப்பால் ஒரு நாவிதர் என்பதால் சங்கத்தின் இதர கன்னித் துறவிகளால் தாழ்ந்த பிறப்புள்ள ஒருவராய் அவர் கடிந்துக் கொள்ளப்படுவதை வினயபிடகம் தெரிவிக்கிறது. புத்த சமயத்திலேயே நிலைமை இவ்வாறு எனில் சனாதனவாதிகளிடம் என்ன பாடுபட்டிருப்பர்? ஆனால் இத்தகைய தம் தாழ்நிலைக்கு ‘சுரபி’ பசுவின் சாபம்தான் காரணம் என்ற நம்பிக்கை கேரளத்தைச  கேரளத்தைச் சேர்ந்த நாவிதர்களிடையே நிலவுகிறது. கற்பனையை நம்ப வைப்பதே சனாதனத்தின் வெற்றி என்றால் அத்தகைய பல கற்பனை சதிகளை விரிவாக உடைத்து காட்டியுள்ளதே சுளுந்தீ நாவலின் வெற்றி.  

மன்னராட்சியில் எல்லாச் சேவை சாதியினருக்கும் புஞ்சை நிலம் வழங்கப்பட்டிருக்க, நாவிதர்களுக்கு மட்டும் நஞ்சை நிலம் வழங்கப்பட்டமைக்கு வெறும் சவரத் தொழில் மட்டுமே காரணமல்ல. ‘பண்டுவம்’ எனும் மருத்துவத் தொழிலின் பின்னேயும், அந்தப்புரப் போர்கருவியான ‘சவரகத்தி’யின் பின்னேயும் ஒளிந்திருந்த ‘ராஜரகசிய’ங்களே அசல் காரணம். ஆனால் அதுவே வீழ்ச்சிக்கும் காரணமானது. செந்தூரமாக இருந்த ‘வெடி மருந்து’ வெடிப்பொருளாக மாறி நிகழும் சதிகளால் பண்டுவர்கள் அதிகார பீடத்திலிருந்த பார்ப்பனர்களிடம் தம் மருத்துவ ஓலைச்சுவடிகளைக் கொடுத்து உயிர்தப்ப அவை சமஸ்கிருதத்தில் ‘வைத்யம்’ ஆக உருவெடுத்த வரலாறு உயிரோட்டமாக அமைந்துள்ளது. இங்கிலாந்திலும் நாவிதர்களே மருத்துவர்களாக விளங்கிய காலத்தில் நவீன மருத்துவம் அறிமுகமான பிறகுதான் அவர்களது தொழில் கைநழுவியதே தவிரச் சதியின் பின்னணியில் அல்ல.

Comments

Popular posts from this blog

அம் -பட்டர் விளக்கம்

""சென்னியவிடுதியிலிருந்து- சென்னை மாநகர் வரை"" சென்னியவிடுதி C.வைத்தியநாதன்

வேதை க வைரப்பன்